இன்று முதல் தமிழக திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி: திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வரவேற்பு

சென்னை: இன்று முதல், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:

இன்று முதல், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இன்று முதல், தியேட்டருக்கு படம் பார்க்க வரும் அனைத்து ரசிகர்களுக்கும், அவர்களில் யார் முகக்கவசம் அணியவில்லையோ அவருக்கு, தியேட்டர் நிர்வாகமே இலவச முகக்கவசம் வழங்க உள்ளது. மேலும், தியேட்டர் வாசலிலேயே அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட உள்ளது. அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் அனைவரும் பின்பற்றுவோம். சானிடைசர் வழங்கவும் தியேட்டர் நிர்வாகிகளுக்கு சொல்லி இருக்கிறோம்.  

தமிழகம் முழுவதும் 1,112 ஸ்கிரீன்கள் உள்ளது. அனைத்திலும் 100 சதவீத பார்வையாளர்கள் பாதுகாப்புடன் படம் பார்த்து ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: