சென்னை: கோயில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்த நிலங்களில் நிரந்தரமான கட்டிடங்களை கட்டக்கூடாது என்றும் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்கள், பல சிறு கோயில்கள் சில மலைகள், குன்றுகள் மீதும் வனப்பகுதி நிலங்களிலும் அமைந்துள்ளது. இக்கோயிலும், கோயிலைச் சுற்றியுள்ள நிலப்பகுதியை கோயில் பெயருக்கு பட்டா வழங்கினால் பக்தர்கள் பயன்பாட்டிற்கு எதுவாக அமையும். கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்கு தங்கும் கூடங்கள் அமைத்தல், அவர்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வாகன பாதுகாப்பு மையங்கள் அமைத்தல், குளியலறை மற்றும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருதல் போன்ற பொது நலன் கருதி செய்யப்பட வேண்டிய அத்தியாவசிய மேம்பாட்டு பணிகளுக்கு பிற வகைப்பாடுகளில் உள்ள கோயில் மற்றும் கோயிலைச் சுற்றி உள்ள புறம்போக்கு வனப்பகுதி நிலங்களைகோயில் பெயரில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொண்டு உரிய ஆணை வழங்க ஆவன செய்ய வேண்டுமென ஆணையரால் கடிதம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டு அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது.