தேனி அருகே தட்சிணாமூர்த்தி கோயிலில் 8 சுவாமி சிலைகள் திருட்டு-மர்ம கும்பலுக்கு தனிப்படை வலை

தேனி : தேனி அருகே அரண்மனைப்புதூர் ஊராட்சி, முல்லை நகரில் தட்சிணாமூர்த்தி கோயில் மற்றும் வேதபுரி ஆசிரமம் உள்ளது. நேற்று முன்தினம் அர்ச்சகர்கள் கோயிலை பூட்டிவிட்டு சென்றனர். நள்ளிரவில் மூலவர் சிலை பின்பக்கம் உள்ள கண்ணாடியை உடைத்த மர்மநபர்கள், கர்ப்பகிரகத்தை சுற்றி இருந்த அரை அடி முதல் ஒரு அடி வரை உயரமுள்ள ஐம்பொன்னாலான நான்கு சனாதான முனிவர்கள், வேதவியாசர், மாணிக்கவாசகர், தாயுமானவர், நந்திகேஸ்வரர் சிலை என 8 சிலைகளையும், பலிபீடம் ஒன்றையும் திருடிச் சென்றனர். திருடு போன சிலைகள் பஞ்ச உலோகங்களால் தயாரிக்கப்பட்டவை. இதனால், அவை பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை என கூறப்படுகிறது.

நேற்று காலை கோயிலுக்கு வந்த அர்ச்சகர்கள் சுவாமி சிலைகள் திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கோயிலுக்கு வந்த எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கேரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும், கோயிலைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு அடி உயரத்தில் 20 கிலோ எடை கொண்ட வேதவியாசர் சிலை மற்றும் பலிபீடம் கிடந்ததைக்

கண்டு, அவைகளை மீட்டனர். வேறு எங்கும் சிலைகளை வீசியுள்ளனரா என தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தேனி டிஎஸ்பி தலைமையில், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: