திருவெறும்பூர் அருகே தொடர் மழையால் மலைக்கோயில் தெப்பக்குள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

திருவெறும்பூர் : திருவெறும்பூர் அருகே மலைக்கோயில் தெப்பக்குள சுற்றுச்சுவர் தொடர் மழை காரணமாக இடிந்து குளத்திற்குள் விழுந்தது.திருவெறும்பூர் அருகே மலைக்கோயில் உள்ளது. இந்தக் கோயில் எதிரே உள்ள தெப்பக்குள சுற்றுச்சுவர் பழுதடைந்து மிகவும் மோசமாக இருந்தது. மேலும் அந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருவதற்கு ஏதுவாக தெப்பக்குள சுற்றுச்சுவரில் திருச்சி மாநகராட்சி சார்பில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தது.

ஆனால் அது பழுதடைந்து சரிவர எரிவதில்லை. இந்நிலையில் திருவெறும்பூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தெப்பத்தின் மேற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து தெப்பக்குளத்தில் விழுந்தது. இதனால் அந்த பகுதி இனி இரவு நேரங்களில் இருட்டாக இருப்பதுடன் அந்த பகுதியில் வரும் வாகனங்கள் சாலை தெரியாமல் தெப்பகுளத்திற்குள் விழுந்து விடும் அபாயமும் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் திருவெறும்பூர் மலைக்கோயில் தெப்பக்குளத்தில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக சுற்றுச்சுவர் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்களும் அப்பகுதி மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: