அக்.26-ல் தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டின் வட கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் கனமழை பெய்யக்கூடும். மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்யும். நாளை தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் மிக பலத்த மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். அக்.26-ல் தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். அக்.26-ல் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அக்.27,28-ல் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கோவை, சேலம், மதுரை, புதுக்கோட்டையில் கனமழை பெய்யும். ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். அரபிக்கடல், லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இன்று பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது. மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: