தாதா சாகேப் பால்கே விருது கிடைத்ததில் மகிழ்ச்சி; இந்த நேரத்தில் கே.பாலசந்தர் சார் இல்லாதது வருத்தமளிக்கிறது: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: தாதா சாகிப் பால்கே விருது வாங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த  2019ம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.   இதில் மொத்தம் 7 விருதுகளை தமிழ் திரையுலகம் வென்றுள்ளது. இதற்கான விருதுகள் வழங்கும் விழா வரும் 25ம் தேதி டெல்லியில் நடக்கிறது. சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது அசுரன் படத்தில் நடித்த தனுஷ், சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய் சேதுபதி, சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது விஸ்வாசம் படத்துக்காக டி.இமான், சிறப்பு திரைப்படத்துக்கான விருது பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7, சிறந்த ஒலிக்கலவைக்கான விருது ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக ரசூல் பூக்குட்டி, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது  கருப்புதுரை படத்தில் நடித்த நாகவிஷாலுக்கு வழங்கப்படும். இதே விழாவில், திரையுலகில் பல்வேறு சாதனைகள் படைத்த நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.

மற்றும் பல்வேறு மொழிகளில் தேர்வு செய்யப்பட்ட நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியே நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; தாதா சாகிப் பால்கே விருது வாங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது, விருது வாங்குவேன் என எதிர்பார்க்கவில்லை. நான் விருது பெறும் இந்த தருணத்தில் கே.பாலசந்தர் இல்லையே என்பது வருத்தமாக உள்ளது என தெரிவித்தார்.

Related Stories: