நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை; பிஏபி அணைகள் நிரம்பியது

வால்பாறை :  வால்பாறையில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பிஏபி அனைத்து அணைகளும் நிரம்பியது.வால்பாறை பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களகாக கன மழை பெய்து வருகிறது. நேற்று தென் இந்தியாவின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் சின்னக்கல்லார் (மேல் நீராறு) பகுதியில் 37 மிமீ மழை பதிவாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள அனைத்து சிற்றாறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று காலை நிலவரப்படி சோலையார் அணையில் 34 மிமீ மழை பதிவாகி உள்ளது. கீழ்நீராறு 17 மிமீ, வால்பாறையில் 32 மிமீ மழை பதிவாகி உள்ளது. தொடர் மழை காரணமாக பிஏபி அணைகளான சோலையார் அணை, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, ஆழியார் உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளன. வால்பாறையில் உள்ள மேல் நீராறு, கீழ் நீராறு சிற்றணைக்கும் வரும் நீர் ஒப்பந்தப்படி கேரளாவிற்கு திறந்து விடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கேரள ணைகள் நிரம்பி வழியும் நிலையில், பிஏபி ஒப்பந்தப்படி மேல் நீராறு மற்றும் கீழ் நீராறு அணையும் திறந்துவிடப்பட்டு உள்ளது. அக்.1ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் வரை மேல் நீராறு அணைக்கு வரும் நீரின் அளவை கீழ் நீராறு அணையில் இருந்து திறந்து விட வேண்டும் என்பது ஒப்பந்தம்.

 தற்போது கேரளாவிலும் மழை நீடிப்பதால், கீழ் நீராறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் அரபிக் கடலில் கலந்து வீண் ஆகிறது. கடந்த சில ஆண்டுக்கு முன் இது போன்று ஒரு முறை அதிக மழையில், மேல் நீராறு அணையிலும், கீழ் நீராறு அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, நீர் வரத்திற்கேற்ப கீழ்நீரார் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: