சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் உள்ள 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய மலைப்பாதை வழியாக தமிழகம் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து இருந்து வருகிறது. இந்நிலையில், திம்பம் மலைப்பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.