பாலிடெக்னிக் கல்லூரி தொகுப்பூதிய ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை: தமிழகத்தில் இயங்கி வரும் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிவரும் விரிவுரையாளர்கள் சென்னையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டி அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் சுமார் 250 விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கிய பிரமுகர்களை அழைத்து சென்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் அவர்கள் தொடர்ந்து அங்கு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, ‘கடந்த  ஆட்சியில் பலமுறை இதுகுறித்து நாங்கள் கோரிக்கை வைத்தும் அதை கடந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. புறக்கணிக்கப்பட்ட எங்களுக்கு தற்போதுள்ள முதல்வர் கருணைகூர்ந்து பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட வேண்டும்.  முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் சங்கத்தில் சுமார் 1300 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் 600 பேர் பகுதி நேர விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: