ஆற்காடு: கொரோனா அச்சமின்றி அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களில் தொங்கியபடி செல்பி எடுக்கும் நபர்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பஸ்களில் அதிக பயணிகளை ஏற்றக்கூடாது. பயணம் செய்யும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆற்காடு பகுதியில் செல்லும் பல பஸ்களில் இந்த உத்தரவு காற்றில் பறந்த நிலையில் உள்ளது. அரசின் உத்தரவை மீறி பஸ்களில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் பஸ்களில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர் ஆகியோரும் முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர்.