டெஹ்ராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியதில் ஏராளமானவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட போதே அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தது. புனித தலங்களுக்கு செல்லும் யாத்திரை பயணம் ரத்து செய்யப்பட்டது. இமாலய அடிவாரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 230 கிராமங்கள் இருளில் மூழ்கின. நைனிடால் மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியதால் நைனிடால் ஏரி நிரம்பி வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நைனிடால் மாவட்ட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ராம்நகர் அருகே ரிசார்ட் ஒன்றில் சிக்கியுள்ள சுற்றுலா பயணிகள் 100 பேரை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் சால்தி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கட்டுமானத்தில் இருந்த பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. சம்பாவாத் என்ற இடத்தில் கட்டப்பட்ட பாலத்தின் தூண்கள் நீரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்லுவாணி என்ற இடத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை ஒன்று பெரும் வெள்ளத்தில் சிக்கி கொண்டது. திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக் காடாக இருந்ததால் மிரண்டு போன யானையை வனத்துறை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் கொண்டு சேர்த்தன.இதனிடையே உத்தரகாண்ட் முதல்வர் புஸ்கார் சிங்-ஐ தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, அனைத்து உதவிகளை செய்ய ஒன்றிய அரசு தயாராக இருப்பதாக கூறினார். பேரிடர் மீட்புக் குழு குறித்தும் அவர் கேட்டு அறிந்தார்.