கள்ளக்குறிச்சி ஆசிரியர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளை: மர்ம ஆசாமிகள் துணிகரம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆசிரியர் வீட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் ரூ.7 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி ஏஎல்சி சர்ச் வளாக பகுதியில் குடியிருந்து வருபவர் மதிவாணன் மகன் விஜய்தேவகுமார் (46). இவர் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அதே பகுதியில் அருகருகே 2 வீடுகள் உள்ளன. வடக்கு பகுதியில் உள்ள வீட்டில் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு சாப்பிட்டுவிட்டு தெற்கு பகுதியில் உள்ள வீட்டில் அனைவரும் தூங்கியுள்ளனர்.

பின்னர் இன்று காலை எழுந்து பார்த்தபோது, வடக்கு புறம் உள்ள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விஜய்தேவகுமார் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை, 15 பட்டுப்புடவை, ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவை மாயமாகி இருந்தது. இதன் மதிப்பு ரூ. 7 லட்சம் இருக்கும். நள்ளிரவு நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையடித்து

சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்- இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: