1977ம் ஆண்டு முதல் கோயில்களில் இருந்த ‘500 கிலோ’ தங்க நகைகள் உருக்கி வங்கிகளில் டெபாசிட்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை:  தமிழக கோயில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய, இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரவணன் என்பவர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், கோயில்களில் என்னென்ன நகைகள் உள்ளன என்பன குறித்து பதிவேடுகள் இல்லாததால் நகைகளை உருக்க தடை விதிக்க வேண்டும்.

கோயில்களில் புராதான நகைகள் எவை என்பது குறித்தும் கோயிலுக்கு தேவையான நகைகள் எவை என்பது குறித்தும் கண்டறிய வேண்டும். தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோயில்களில் 2,137 கிலோ தங்க நகைகளை உருக்கி, தங்க கட்டிகளாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இந்த நகைகளை தணிக்கை செய்யாமல் உருக்கக் கூடாது என்று வாதிட்டார். இதற்கு பதிலளித்து தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ‘‘கடந்த 1977ம் ஆண்டு முதல் கோயில் நகைகள் உருக்கப்பட்டு வருகிறது. 500 கிலோ நகைகள், ஏற்கனவே உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டு டெபாசிட் செய்ததன் மூலம் ஆண்டுக்கு 11 கோடி ரூபாய் வட்டி வருவாய் கிடைக்கிறது என்று கூறி அது தொடர்பாக செப்டம்பர் 9ம் தேதி இயற்றப்பட்ட அரசாணையை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசாணை குறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு அனுமதியளித்து விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: