திருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டது. சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடி. இதில் 3231 மில்லியன் கன நீர் சேமிக்கலாம். மேலும் பூண்டி நீர்த்தேக்கத்துக்கன வரத்து கால்வாயில் பருவமழையினால் ஆந்திர மாநிலம், அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் 1600 கன அடி வந்தது. நீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததால் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திலிருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு 3 மற்றும் 13 ஆகிய மதகுகள் வழியாக வினாடிக்கு தலா 500 கன அடி நீர் வீதம் வினாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.