குலசை முத்தாரம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: மகிஷா சூரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் காட்சி

தூத்துக்குடி: உலக அளவில் பிரசித்திபெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 6ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கொடியேற்றம் மற்றும் வரும் 15ம்தேதி சூரசம்ஹாரத்தன்று பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஏற்கனவே அமலில் உள்ள வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமாக பூஜைகள் நடந்தது.

இந்நிலையில் நேற்று முதல் நாளை மறுதினம் (14ம்தேதி) வரை பக்தர்கள் தரிசனத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் வேடமணிந்த பக்தர்கள் யாரும் கோயில் வளாகம் பகுதியில் வர அனுமதி கிடையாது. வேடம் அணியும் பக்தர்களுக்கு திருக்காப்பு வழங்கப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.

வேடம் அணிந்த பக்தர்கள் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி இல்லாததால் கோயில் வளாகத்தில் வெளியே நின்றவாறு தரிசனம் செய்து வருகின்றனர். கோயில் அருகில் அமைந்துள்ள கடற்கரை பகுதியிலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தசரா திருவிழாவின் 6ம் நாளையொட்டி நேற்று இரவு 8.30 மணிக்கு மகிஷா சூரமர்த்தினி அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய முத்தாரம்மன் உள் வீதியுலா வந்தார்.

Related Stories: