தமிழகத்தில் அரசின் கையிருப்பில் 2.40 லட்சம் டன் நிலக்கரி உள்ளது: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பேட்டி: தமிழகத்திற்கு மின் உற்பத்திக்கான நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. தற்போது 4 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பில் உள்ளது. மேலும், தமிழகத்தில் நாளொன்றுக்கு 56 ஆயிரம் டன் நிலக்கரியின் தேவை இருக்கிறது. தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரி வரவு வந்து கொண்டிருக்கிறது. அதன்படி 4 நாட்களுக்கான கையிருப்பாக 2.40 லட்சம் டன் நிலக்கரி தமிழக அரசிடம் சராசரி கையிருப்பாக உள்ளது. தமிழகத்தின் மொத்த மின் தேவையில் 41% அனல்மின் நிலையங்களில் இருந்து கிடைக்கிறது. இதில் தமிழக அரசு சொந்தமாக 1,800 மெகாவாட் மின் உற்பத்தி செய்கிறது.

தனியார் அனல் மின் நிலையங்களிலிருந்து 2830 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. 1,300 மெகாவாட் மின்சாரம் தான் அரசுக்கு தனியார் அனல் மின் உற்பத்தியாளர்கள் வழங்கி வருகின்றனர். பற்றாக்குறையான 1500 மெகாவாட் மின்சாரத்தை ஈடுசெய்ய தமிழக அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்படுகிறது. அதிகபட்ச உற்பத்தித் திறனில் இயக்கப்பட்டு 3300-3350 மெகாவாட் நாளொன்றுக்கு அரசின் அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது. அனல்மின் நிலையங்களில் 80% நிலக்கரி உள்நாட்டு உற்பத்தியாகும். மேலும் 20% மட்டுமே வெளிநாட்டு நிலக்கரி கலந்து எரியூட்டப்படுவதால், நிலக்கரி தட்டுப்பாட்டிற்கு வாய்ப்பே இல்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: