தமிழகம் முழுவதும் திருக்கோயில்களின் பாதுகாப்புக்கென 10,000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மண்டலத்தில் உள்ள அனைத்து அலுவலர்களுடன்  ஆலோசனைக் கூட்டம் சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார். இதில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்  செயலாளர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்,  கூடுதல் ஆணையர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: இந்து சமய அறநிலையத்துறையின்  சார்பில் 112  அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் திருப்பணிகள், திருத்தேர், திருக்குளங்கள், நந்தவனங்கள், திருமண மண்டபங்கள், புதிய கல்லூரிகள், நலதிட்ட உதவிகள், பணியாளர் நியமனம் உட்பட பல்வேறு பணிகள் அடங்கும். இந்த அறிவிப்புகளை ஓராண்டுக்குள் செயல்படுத்துவதில் துறை அலுவலர்கள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை திருக்கோயில் பணியாளர்கள் உடனே செயல்படுத்த வேண்டும். தற்காலிகமாக நியமிக்கப்பட்டு 5 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றி வந்த பணியாளர்களுக்கு முதல்வர் பணிநியமன ஆணைகளை விரைவில் வழங்க இருக்கிறார். மானிய கோரிக்கையில் அறிவித்தபடி தமிழ்நாடு முழுவதும் திருக்கோயில்களின் பாதுகாப்பிற்கென 10,000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளார்கள். அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: