சென்னை: ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் மதுரை, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்தார். இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம், ஊதிய உயர்வு, கார்ப்பஸ் பண்ட் உள்ளிட்ட கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முந்தைய ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்த பிறகும் நிறைவேற்றப்படவில்லை. அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற, அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.300 கோடி மட்டுமே தேவைப்படுகிறது.