மகளுடன் ஏற்பட்ட சண்டையில் விபரீதம்: தன்னைத் தானே குத்திகொண்ட எஸ்ஐக்கு தீவிர சிகிச்சை

ஆவடி: குடும்ப பிரச்னையில் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்ட எஸ்ஐக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் சாய்குமார் (50). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3ம் அணியில் எஸ்ஐயாக பணியாற்றி வருகின்றார். இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து குடும்பத்துடன் தகராறில் ஈடுபடுவாராம். நேற்றிரவு அதிகமான குடிபோதையில் வீட்டுக்கு வந்த எஸ்ஐ குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது அவரது மகள், சாய்சொரூபா தந்தையை கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த எஸ்ஐ, வீட்டில் இருந்து கத்தியை எடுத்து தனது வயிற்றில் சரமாரி குத்திக்கொண்டார். இதனால் அ்திர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ரத்தவெள்ளத்தில் துடித்த எஸ்ஐயை மீட்டு உடனே அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆபத்து கட்டத்தில் உள்ள எஸ்ஐக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்படி, திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: