சென்னை: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, திருத்தணி முருகன் கோயிலில் தங்கத்தேர் நவம்பர் முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலில் உள்ள தங்கரதம் 1972ம் ஆண்டு செய்யப்பட்டது. தங்கத்தேரின் மரத்தூண்களின் மரபாகங்கள் பழுது அடைந்ததால் உற்சவம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. தற்போது புதிய அரசு பதவியேற்றவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இக்கோயிலுக்கு வருகை தந்து கடந்த ஜூலை 2ம் தேதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பழுதடைந்துள்ள, தங்கரதத்தின் பணிகளை விரைந்து முடித்து திருத்தேர் வீதி உலா வர அறிவுரை வழங்கினார்.