நவம்பர் மாதம் முதல் திருத்தணி முருகன் கோயில் தங்கத்தேர் பயன்பாட்டிற்கு வரும்: அறநிலையத்துறை அறிவிப்பு

சென்னை: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, திருத்தணி முருகன் கோயிலில் தங்கத்தேர் நவம்பர் முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயிலில் உள்ள தங்கரதம் 1972ம் ஆண்டு செய்யப்பட்டது. தங்கத்தேரின் மரத்தூண்களின் மரபாகங்கள் பழுது அடைந்ததால் உற்சவம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.  தற்போது புதிய அரசு பதவியேற்றவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இக்கோயிலுக்கு வருகை தந்து கடந்த ஜூலை 2ம் தேதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பழுதடைந்துள்ள, தங்கரதத்தின் பணிகளை விரைந்து முடித்து திருத்தேர் வீதி உலா வர அறிவுரை வழங்கினார்.

அதன்படி ரூ.15 லட்சம் செலவில் மரத்தால் ஆன தேர் பணிகள் முடிக்கப்பட்டு புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டு அதன் மீது ரதத்தில் குடைகலசம் முதல் சுவாமி அடிபீடம் வரை பிரித்து வைக்கப்பட்ட தங்க ரேக் பதித்த உலோகத்தகடுகளை மீண்டும் புதிய மரத்தில் பதிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. தங்கரதத்தில் உள்ள தகடுகளை சுத்தம் செய்யும் பணிகள், கை மெருகூட்டும் பணிகள், செப்பு ஆணிகள் பதிக்கும் பணிகள்  உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், பழுதடைந்த தங்கத்தேரின் மேற்கூரை  சரிசெய்யும் பணிகளும் இந்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்பட்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கோயிலின் தங்கத்தேர் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதாவது, நான்கு ஆண்டுகளுக்கு தங்க தேர் ஓடுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: