சென்னை: கழிப்பிட வசதி இல்லாத கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கட்டண கழிப்பறையை பயன்படுத்திக்கொள்ள ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தலா ரூ.300 வழங்க அனுமதி அளித்து கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் 175க்கும் ேமற்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த விற்பனை நிலையங்களில் பெரும்பாலானவற்றில் கழிப்பறை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஊழியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு சில அலுவலகங்களில் ஊழியர்கள் கட்டணக் கழிப்பறையை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நிலை தான் உள்ளது. இதுதொடர்பாக, சமீபத்தில் காணொலி காட்சி மூலம் உயர் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ெபண் ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கழிப்பறை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், கழிப்பறை வசதி இல்லாத கழிப்பிடங்களில் பொது கழிப்பறையை பயன்படுத்திக்கொள்ள நிதி வசதி அளித்து கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக பொதுமேலாளர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அனைத்து மண்டல அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்படாத கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.300 கூடுதலாக தர வேண்டும். அவர்கள் அந்த நிதியை பயன்படுத்தி கட்டண கழிப்பறையை பயன்படுத்திக்கொள்ள தற்போதைக்கு இந்த நிதி பயன்பெறும். அனைத்து மண்டல மேலாளர்கள் இதுதொடர்பாக அறிவுறுத்தப்படுகின்றனர். யாரெல்லாம் விற்பனை நிலையங்களில் பணிபுரிகிறார்களோ அனைவருக்கும் இந்த நிதியை தர வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.