சென்னை: தமிழ் வளர்ச்சி துறையில் வேலை வாங்கி தருவதாக, ரூ.5 லட்சம் மோசடி செய்த இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ரேணியல். போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனிதா கார்மல் (43). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில் மூலம் சொந்த ஊர் சென்றுள்ளார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்த திருப்பாச்சூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை மேகலா (59) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது மேகலா, ‘‘உயர் அதிகாரிகளை எனக்கு நன்கு தெரியும். யாருக்காவது வேலை வேண்டும் என்றால் என்னிடம் சொல்லுங்கள். தமிழ் வளர்ச்சித்துறையில் வேலை வாங்கி தருகிறேன்’’ என கூறியுள்ளார். இதனால் அவரை நம்பிய அனிதா கார்மல், தனக்கு வேலை வாங்கி தரும்படி கூறியுள்ளார். இதற்காக இரண்டு தவணையாக 5 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி வேலை வாங்கி கொடுக்காமல் மேகலா ஏமாற்றி வந்துள்ளார். மேகலாவுக்கு உடந்தையாக கொளத்தூர் விநாயகபுரம் அரசு பள்ளி ஆசிரியை சத்யபிரியா (39) இருந்துள்ளார்.