வந்தவாசி- ஆரணி சாலை ஆயிலவாடியில் சிறுபாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

பெரணமல்லூர் :  வந்தவாசி- ஆரணி சாலை ஆயிலவாடி பகுதியில் சிறுபாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி- ஆரணி நெடுஞ்சாலையில் உள்ளது பெரணமல்லூர். இந்த பகுதி சென்னை, மேல்மருவத்தூர், திண்டிவனம், சென்னை, புதுச்சேரி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக இருந்து வருகிறது.  இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள ஆயிலவாடி பகுதியில் பிரதான சாலையில் சிறுபாலம் (கல்வெர்டு) அமைக்க பள்ளம் எடுக்கப்பட்டது. அப்போது, அங்கு போதிய விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் அடிக்கடி விபத்துகள் நடந்தது.

பின்னர், அங்கு சிறுபாலம் கட்டப்பட்டது. ஆனால், அந்த பணிகளை சரிவர மேற்கொள்ளாமல் மேடும், பள்ளமுமாக அமைத்துள்ளனர். இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `இங்கு அமைக்கப்பட்டுள்ள சிறுபாலம் பணி முழுமை பெறவில்லை. அந்த இடத்தில் பகல் நேரங்களில் ஓரளவு சமாளித்து சென்றுவிடுகிறோம். இரவு நேரங்களில் வரும்போது கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சிறுபாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: