சென்னை: சட்டப் பேரவையில் உயர்கல்வி மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்புகளை தொடங்குவதற்கான அரசாணையை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதையடுத்து 10 கல்லூரிகளில் 10 பாடப்பிரிவுகளின் கீழ் ஆராய்ச்சி படிப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணை: தமிழக சட்டப் பேரவையில், ஆகஸ்ட் 26ம் தேதி நடந்த உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் நலன் கருதி முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகளை நடத்த செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், கோவில்பட்டி, சென்னை நந்தனம் மற்றும் திருப்பூர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் புதியதாக ஆராய்ச்சி பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.