தனிப்பட்ட தாக்குதலால் உடைந்து போக மாட்டேன்: சமந்தா அறிக்கை

சென்னை: தனிப்பட்ட தாக்குதலால் என்னை உடைக்க முடியாது என ஆவேசமாக கூறியுள்ளார் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்தார் சமந்தா. கடந்த 2017ல் இவர்கள் திருமணம் நடந்தது. சில மாதங்களாக இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதையடுத்து இருவரும் பிரிவதாக கடந்த வாரம் அறிவித்தனர். இந்நிலையில் விவாகரத்துக்கு காரணமான விஷயங்களாக சமந்தா பற்றி பல்வேறு தகவல்கள் உலா வந்தன. இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவில் அறிக்கை ஒன்றை சமந்தா நேற்று வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு எதிராக பரப்பப்பட்ட வதந்திகளுக்கும் கதைகளுக்கும் எதிராக என்னை பாதுகாத்த அனைவருக்கும் நன்றி. என் மீது நீங்கள் காட்டிய கருணைக்கும் நன்றி. எனக்கு மற்றொருவருடன் தொடர்பு இருந்தது, நான் குழந்தை பெற எண்ணவில்லை, நான் கருவை கலைத்தேன், நான் ஒரு சந்தர்ப்பவாதி என்றெல்லாம் கூறுகிறார்கள்.

விவாகரத்து வலி மிகுந்தது. தனியாக அதிலிருந்து நான் மீண்டு வர சிறிது நேரம் கொடுங்கள். என் மீதான இந்த தனிப்பட்ட தாக்குதல் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கும். அது எனக்கும் தெரியும். நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். அவர்கள் கூறும் எதுவும் என்னை உடைக்காது.

இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.

Related Stories: