தேசிய தரவு தளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யலாம்: உதவி ஆணையர் வேண்டுகோள்

திருவள்ளூர்: மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) சுதா வௌியிட்ட அறிக்கை:

உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒன்றிய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க தேசிய தரவு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி //eshram.gov.in/ என்ற வலைத்தளத்தின் மூலம் கட்டுமான தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், பேக்கிங் செய்வோர், தச்சு வேலை செய்வோர், கல் குவாரி தொழிலாளர்கள் மர ஆலை தொழிலாளர்கள், உள்ளூர் கூலி தொழிலாளர்கள், முடித்திருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள் என 156 வகையான இஎஸ்ஐ மற்றும் பிஎப் பிடித்தம் செய்யப்படாத அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை அனைத்து பொது சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தொழிலாளர்கள் சுயமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களும் இத்தரவுகள் தளத்தின் கீழ் பதிவுசெய்ய வேண்டும். இத்தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ள 16 முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும். பதிவிற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. பதிவேற்றம் செய்வதற்கு ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஓடிபி அல்லது கைரேகை மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்த பிறகு பயனாளிகளுக்கு 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஏதும் பிற காரணங்களுக்காகவோ புலம் பெயர நேர்ந்தாலும், அரசிடமிருந்து சலுகைகளை பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: