சென்னை, குஜராத்தில் உள்ள போர்டு தொழிற்சாலைகளை வாங்குகிறது டாடா: விரைவில் முடிவு தெரியும்

சென்னை: சென்னை, குஜராத்தில்  மூடப்பட இருக்கும் போர்டு  கார் தொழிற்சாலைகளை வாங்க,   டாடா நிறுவனம் பேச்சுவார்த்தை  நடத்தி வருகிறது. அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு 1995ம் ஆண்டு, சென்னை அருகே மறைமலை நகரில் ‘போர்டு இந்தியா’ என்ற பெயரில்  கார்கள்   தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கியது.  உள்நாட்டு விற்பனையில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் போர்டு கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. தொடர் வரவேற்பு காரணமாக  குஜராத் மாநிலம் சனந்த்திலும் ஒரு ெதாழிற்சாலையை தொடங்கியது. இந்நிலையில் மற்ற வெளிநாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களின், போட்டியை சமாளிக்க முடியாமலும், கொரோனாவுக்கு பிறகு மந்தமான விற்பனை காரணமாகவும் இந்தியாவில் உள்ள 2 தொழிற்சாலைகளையும் மூடப்போவதாக அந்நிறுவனம் அறிவித்தது. அதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு தரப்பிலும் போர்டு நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்கேற்ப இந்தியாவில் உள்ள 2 போர்டு தொழிற்சாலைகளையும் வாங்க இந்திய நிறுவனமான டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.  அதற்காக டாடா நிறுவனத்தின்  தலைவர் என்.சந்திரசேகரன்,  செயல் இயக்குநர் கிரிஷ் வாக் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் சமீபத்தில்  ஆலோசனை நடத்தினர். அப்போது, போர்டு நிறுவனத்தில்  பணியாற்றும் தொழிலாளர்களின் வருங்காலம், நிதி சுமை உட்பட பல்வேறு விவரங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன. போர்டு நிறுவனம், கடந்த 10 ஆண்டுகளில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டம் ஏற்பட்டதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. எனவே, விலை குறித்தும் போர்டு இந்தியா , டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் பேசி வருகின்றனர்.  இந்த பேச்சுவார்த்தை விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதன்பிறகு, தமிழக அரசு உடன் இணைந்து  டாடா நிறுவனம் ‘போர்டு தொழிற்சாலைகளை வாங்க  உள்ள விவரங்களை’ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Related Stories: