சென்னை: தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி பிறந்த கவிஞர் பிறைசூடன், 1985ம் ஆண்டு வெளியான சிறை திரைப்படத்தில் ராசாத்தி ரோசாப்பூவே என்ற பாடல் மூலம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனால் திரைத்துறைக்கு பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் கோலூன்றியவர் பிறைசூடன். 1980களில் இருந்து இளையராஜாவோடு பயணித்து வந்த பிறைசூடன், இளையராஜாவின் பல்வேறு படங்களுக்கு முக்கிய பாடல்களை எழுதியுள்ளார். குறிப்பாக செம்பருத்தி திரைப்படத்தில் நடந்தால் இரண்டடி, சோலைபசுங்கிளியே, மீனம்மா மீனம்மா, ஆட்டமா தேரோட்டமா உள்ளிட்ட பாடல்கள் பிறைசூடனுக்கு பெருமையை தேடி கொடுத்தது. பணக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான் என்ற இவரது பாடல் மிகவும் பிரபலமானது.