சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு திருச்சி ராணுவ வீரர் சூட்கேசில் துப்பாக்கி குண்டு பறிமுதல்

சென்னை:  சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து நேற்று காலை 6.10 மணிக்கு டெல்லி செல்லும் தனியார் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அப்போது திருச்சியை சேர்ந்த விக்னேஷ் (30) என்பவர் விமானத்தில் டெல்லி செல்ல வந்தார். அவர், ராணுவத்தில் பணியாற்றுகிறார். அவருடைய உடமைகளை சோதனை செய்தனர். சூட்கேசில் விக்னேஷின் ராணுவ உடைக்குள் 9 எம்எம் ரகத்தை சேர்ந்த  துப்பாக்கி குண்டு ஒன்று இருந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து விக்னேஷிடம் அதிகாரிகள் விசாரித்த போது, ‘‘ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறேன். இதை நான் கவனக்குறைவாக எனது ராணுவ உடையின் பாக்கெட்டில் போட்டு வைத்திருந்தேன். புறப்படும் அவசரத்தில் குண்டு இருந்ததை கவனிக்கவில்லை’’ என்றார். விமானத்தில் துப்பாக்கி, குண்டு போன்ற அபாயகரமானபொருட்களை கொண்டு செல்ல கூடாது என்ற தடை இருப்பதால், பாதுகாப்பு அதிகாரிகள் அவரது பயணத்தை  ரத்து செய்தனர். அதோடு ராணுவ வீரர் விக்னேஷையும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி குண்டையும் சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

Related Stories: