சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஊடுகதிர் (எக்ஸ்ரே) எடுத்துக் கொண்ட மக்களுக்கு அதற்கான முடிவுகள் வெள்ளைத்தாளில் விநியோகிக்கப்படுகின்றன என்றும், முக்கியமான மருத்துவம் - சட்டம் சார்ந்த நிகழ்வுகளுக்கு மட்டும் படச்சுருளில் முடிவுகள் தரப்படுவதாகவும், மருத்துவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் முடிவுகள் பகிர்ந்து கொள்ளப்படுவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி எக்ஸ்ரே முடிவுகளை வெள்ளைத்தாளில் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும். இரண்டாவது கருத்துரை வாங்கும் வகையில் வேறு ஒரு மருத்துவரிடம் காண்பிக்க வசதியாக தங்களுக்கு எடுக்கப்படும் எக்ஸ்ரேவுக்கு முடிவுகள் படச்சுருளில் கொடுக்க வேண்டும். எனவே தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எக்ஸ்ரே முடிவுகளை படச்சுருளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.