லக்கிம்பூர் வன்முறையை அரசியலாக்கும் காங்கிரஸ்: உத்தரப்பிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சிப்பதாக பாஜக விமர்சனம்..!

விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் ராகுல் காந்தியும், காங்கிரசும் அரசியலாக்க முயற்சி செய்வதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது சாலையில் நடந்து சென்ற விவசாயிகள் கூட்டத்தில், பாஜ.வினரின் கார் தாறுமாறாக ஓடி பலர் மீது மோதியது. இதில் 4 விவசாயிகள் பலியாயினர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கி உள்ளது. விவசாயிகள் மீது மோதிய காரில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது.

அவர் உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள உபி அரசு, எதிர்க்கட்சி தலைவர்கள் யாரையும் நுழைய விடாமல் தடுத்து வருகிறது. இதனிடையே காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் பாஜக இது குறித்து காங்கிரஸ் மீது விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜகவின் சம்பித் பத்ரா; விவசாயிகள் இறந்த விவகாரத்தை ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் அரசியலாக்க முயற்சிக்கின்றனர்.

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உ.பி. அரசு விசாரணை தொடங்க முடிவு செய்துள்ளது. பிரேத பரிசோதனை தொடர்பாக கேள்வி எழுப்ப ராகுல் காந்தி என்ன மருத்துவரா?. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் விவசாயிகள் மீது நடந்த தடியடி பற்றி ராகுல் காந்தி ஏன் கேள்வி கேட்கவில்லை? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: