நடுக்கடலில் மீன் பிடித்தபோது மின்னல் தாக்கி மீனவர் பலி: காசிமேட்டில் சோகம்

சென்னை: நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, சக மீனவர்களை அழைப்பதற்காக படகில் இருந்த ஜிபிஆர்எஸ் கருவியை ஆன் செய்தபோது, மின்னல் தாக்கி மீனவர் பலியான சம்பவம், காசிமேட்டில் சோகத்தை ஏற்படுத்தியது. காசிமேடு, சிங்காரவேலன் நகர், 4வது தெருவை சேர்ந்தவர் சுமன் (எ) தேசப்பன் (40), மீனவர். இவரது மனைவி பபிதா (34). இவர்களுக்கு லஷ்மிபிரியா (17) என்ற மகள், அர்ஜூன் (11) என்ற மகன் உள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில்  தேசப்பனுக்கு சொந்தமான பைபர் படகில் காசிமேடு பகுதியை சேர்ந்த தியாகராஜன், கோவிந்தராஜ், தமிழரசன் ஆகியோர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 14 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென மழை பெய்தது. இதனால், இவருடன் மீன்பிடிக்க படகுகளில் வந்த சக மீனவர்களை தொடர்பு கொள்வதற்காக, தனது படகில் இருந்த  ஜிபிஆர்எஸ் கருவியை தேசப்பன் ஆன் செய்துள்ளார். அந்த நேரத்தில் திடீரென மின்னல் தாக்கியதில், தேசப்பன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் உடனே காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தனர். பின்னர், மற்ற மீனவர்கள் உதவியுடன் தேசப்பனின் சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனர்.

தகவலறிந்து, மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் ஆகியோர் மீன்பிடி துறைமுகத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, தேசப்பனின் உடல் அங்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து கதறி அழுது கொண்டிருந்த குடும்பத்தினருக்கு  ஆறுதல் கூறினர். இதன் பிறகு, பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை ஸ்டான்லி அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் மீன்பிடி துறைமுக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: