தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூரில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தை எம்எல்ஏ நிவேதாமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பைபர்படகு மற்றும் நாட்டுப்படகு மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க கடலில் கருங்கல் கொட்டப்பட்டு தடுப்புச்சுவர் அமைக்பட்டு வருகிறது. இதனால் கடலில் அலைகளின் வேகம் அதிகரித்து அருகில் உள்ள குட்டியாண்டியூரில் கடல் அரிப்பை ஏற்படுத்துகிறது. சில மாதங்களில் 100 மீட்டர் அளவிற்கு கடல் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் உட்புகுந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடல் அரிப்பில் கரைக்கு பாதுகாப்பாகவும், அரணாகவும் இருந்த கருவேல மரங்கள் கடலில் அடித்து செல்லப்பட்டன.