திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலுக்கு தங்க சூலம்: அமைச்சர் தகவல்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலுக்கு தங்கத்தில் சூலம் செய்து காளியம்மனுக்கு வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் வரும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில்  இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக்கு பின் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது,  காளியம்மன் கையில் இருந்த சூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டுள்ளதா அல்லது திருடப்பட்டதா என ஒரு தினசரி நாளிதழில் கடந்த சில நாடகளுக்கு முன் செய்தி வெளியானது.  

இது குறித்த ஆய்வு அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் குருக்களிடம் விசாரித்ததில் சூலம் காணாமல் போனது உறுதியாகி உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நடந்த அன்றே இது குறித்து காவல் நிலைத்தில் புகார் செய்யப்பட்டது. ஆனால், இது நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி காளியம்மனுக்கு புதிதாக தங்கத்தில் சூலம் செய்து தரப்படும். இந்த கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: