மாதா சிலையின் தலை உடைப்பு: திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பூண்டி பஸ் நிலையத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மாதா சிலை உள்ளது. பூண்டி நீர்த்தேக்கத் திற்கு வரும் சுற்றுலா பயணிகள், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் நோயாளிகள், அவ்வழியாக செல்பவர்கள் இந்த மாதா சிலையை பிரார்த்தனை செய்துவிட்டு செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில் பஸ் நிலையத்துக்கு வந்தவர்கள் மாதாவை தரிசிக்க சென்றபோது சிலையின் தலை துண்டிக்கப்பட்டிருப்பதை பார்த்து கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இதுபற்றி புல்லரம்பாக்கம் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன், தாலுகா இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தலை துண்டிக்கப்பட்ட மாதா சிலையை கோணிப்பையை கொண்டு மூடினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் மாதா சிலையை உடைத்த மர்ம நபர்களை பற்றி விசாரித்து வருகின்றனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: