‘2 லேப்டாப் கொண்டு செல்லக்கூடாது’ அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் பாதுகாப்பு அதிகாரி கடும் வாக்குவாதம்: விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை:  தமிழக நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று காலை 6 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்கு மீனம்பாக்கம் உள்நாட்டு விமானநிலையத்துக்கு நேற்று காலை 5.15 மணிக்கு வந்தார். பாதுகாப்பு சோதனை பிரிவில் அமைச்சரின் கைப்பையை ஸ்கேன் மூலம் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் பரிசோதித்தார். அப்போது, அமைச்சரின் கைப்பையில் 2 லேப்டாப்கள் இருந்தன. அதை பார்த்ததும் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர், அமைச்சரிடம் ஏன் 2 லேப்டாப்களை எடுத்துச்செல்கிறீர்கள்’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு அமைச்சர், ‘எனது அவசர தேவைக்காக எடுத்து செல்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர், அமைச்சரிடம் கடும் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு தமிழ் தெரியவில்லை. ஆங்கிலமும் சரியாக புரியவில்லை. இந்தி மட்டுமே பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவருடன் அமைச்சர் இந்தியில் பேசி விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் அந்த அதிகாரி ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விமானநிலைய உயரதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் அமைச்சரிடம் பேசி சமாதானப்படுத்தினர். அப்போது அமைச்சர், ‘பயணிகளுக்கு உதவி செய்யத்தான் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர். மாறாக அவர்களுக்கு தொல்லை கொடுப்பதற்காக அல்ல. பயணி ஒருவர் 2 லேப்டாப் எடுத்து செல்லக்கூடாது என்று ஏதாவது விதிமுறை உள்ளதா’ என்றார். அதற்கு அதிகாரிகள், ‘அப்படி எந்த விதிமுறைகளும் கிடையாது’ என்று தெரிவித்து அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டனர்.

இதையடுத்து அமைச்சரிடம் வாக்குவாதம் செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதன்பிறகு அமைச்சர் விமானத்தில் புறப்பட்டு சென்றார். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கடந்தாண்டு திமுக எம்.பி. கனிமொழியிடம் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிரச்னை செய்தார். தற்போது, நிதி அமைச்சரிடம் பிரச்னை செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பயணிகளுக்கு உதவி செய்யத்தான் அதிகாரிகள் உள்ளனர். மாறாக அவர்களுக்கு தொல்லை கொடுப்பதற்காக அல்ல. ஒருவர் 2 லேப்டாப் எடுத்து செல்லக்கூடாது என்று விதிமுறை உள்ளதா.

Related Stories: