ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் 4ம் தேதி முதல் டாஸ்மாக் மூடல்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாகவும், ஏனைய 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் 9.10.2021ல் ஒரே கட்டமாகவும் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 4.10.2021 காலை 10 மணி முதல் 6.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மற்றும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் 7.10.2021 காலை 10 மணி முதல் 9.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மேற்படி நாட்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் பீர் ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்யவும், மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடம் மூடுவதற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உத்தரவிட்டுள்ளது.

எனவே, வாக்குப்பதிவு நாளில் தேர்தல் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளிலும், அப்பகுதிக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது மதுக்கூடம் திறப்பதோ அல்லது அதனை இப்பகுதிகளில் எடுத்துச் செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது உரிய சட்ட மற்றும் விதிகளின் படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

* காந்தி ஜெயந்தி, மிலாது நபியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்

டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் எல்.சுப்பிரமணியன் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி நாடு முழுவதும் காந்தி ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, ‘நாளை மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள்  மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். 19ம் தேதி மிலாது நபி தினத்தன்றும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.

Related Stories: