திருத்தணி முருகன் கோயிலில் மிஸ்டுகால் கொடுத்தால் இலவச மொட்டையடிக்க டோக்கன் கிடைக்கும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: நேர்த்திகடனாக மொட்டை அடிக்க விரும்புவோர் மிஸ்டுகால் கொடுத்தால் இலவச டோக்கன் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். திருத்தணி முருகன் கோயிலுக்கு  இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று வந்தார். இதன்பின்னர், மலைக்கோயிலுக்கு சென்ற அமைச்சர் அங்குள்ள அன்னதான கூடம், தங்கத் தேர், வெள்ளி தேர் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து, கோயிலில் சாமி படங்களை தவிர வேறு படங்கள்  இருக்கக் கூடாது. மேலும், அங்கிருந்த முன்னாள் முதல்வர்களின் படங்களை அகற்ற உத்தரவிட்டார்.

இதன்பிறகு முடி காணிக்கை செலுத்தும் இடம் மற்றும் அன்னதான கூடத்தையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, ‘‘திருத்தணி கோயிலில் கடந்த 10 வருடங்களாக ஓடாமல் உள்ள தங்கத் தேர், வெள்ளி தேர் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தேர்களில் விரைவில் முருகன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். பெண்கள், ஆண்களுக்கு தனித்தனியாக குளியல் அறை ஏற்பாடு செய்யப்படும்.

பக்தர்கள் குளிப்பதற்கு வெந்நீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராஜகோபுரம் கட்டும் பணிகள் நடைபெற்றுவருவதால் 360 படிக்கட்டுக்கள்தான் உள்ளது. இனிமேல் 365 படிக்கட்டுக்கள் அமைக்கப்படும்.

இனிமேல், கோயில்களில் காலை உணவாக சாப்பாட்டுக்கு பதிலாக இட்லி, பொங்கல் வழங்கப்படும். அறநிலையத்துறையும் பிஎஸ்என்எல் நிர்வாகம் இணைந்து பக்தர்கள் ெமாட்டையடிக்க புதிய திட்டம் உருவாக்கி உள்ளது. இதன்படி மொட்டையடிக்கும் இடத்தில் மின்னணு எந்திரம் வைக்கப்பட்டிருக்கும். இதன் அருகே சென்று யாருக்கு மொட்டையடிக்க வேண்டுமோ அவரது முகத்தை ஸ்கேன் செய்துவிட்டு அங்கு புதிதாக கொடுக்கப்பட்டுள்ள 8939971540 எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இது உடனடியாக ஸ்கேன் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படத்துடன் டோக்கன் அனுப்பிவைக்கப்படும். அந்த டோக்கனை காண்பித்து பக்தர்கள் இலவசமாக மொட்டை அடித்துக்கொள்ளலாம் என இவ்வாறு அமைச்சர் பேசினார். இந்த ஆய்வின்போது அமைச்சருடன் இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: