ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் 34 இடங்களில் போலீசார் வாகன சோதனை

காஞ்சிபுரம்: ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 34 இடங்களில் எஸ்பி சுதாகர் மேற்பார்வையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த 10 நாட்களாக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 100க்கும் மேற்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து, எஸ்பி சுதாகர் உத்தரவின்பேரில் 200 போலீசார் மாவட்டம் முழுவதும் சுமார் 34 இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, போக்குவரத்து விதிகளை மீறிய 770 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் , விதிமீறல் குறித்து வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். இந்த சோதனையினை எஸ்பி நேரடியாக ஆய்வு செய்தார். ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு பெறும் வரை, இந்த வாகன சோதனை மாவட்டம் முழுவதும் நடக்கும். இதில், ரவுடிகள் கைது செய்யப்படுவர். இதன்மூலம் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை, போலீசார் உறுதி செய்வார்கள் என, எஸ்பி சுதாகர் தெரிவித்தார்.

Related Stories: