தொழில், வேலைவாய்ப்பு, சுற்றுலாவுக்காக இந்தியா வரும் வெளிநாட்டினரை கண்காணிக்க தனிப்பிரிவு: மாவட்ட அளவில் ஏற்படுத்த டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தொழில், வேலைவாய்ப்பு, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியா வரும் இலங்கை, நைஜீரியா, சீனா, ஈரான், வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் விசா காலம் முடிந்தும் இந்தியாவிலேயே தங்கியிருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற வழக்கில் தொடர்புடைய சுரேஷ்ராஜ் உள்ளிட்ட பல வெளி நாட்டினர், ஜாமீன் கோரியும், முன்ஜாமீன் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் மட்டும் 13,289 பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதை பதிவு செய்த நீதிபதி, பல வெளிநாட்டினர், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் இதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள வெளிநாட்டவர்களை தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகு உடனடியாக அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விசா காலம் முடிவடைந்து தங்கியிருக்கும் பலர் போலி ஆவணங்கள் மூலமாக இந்திய அடையாள அட்டைகளை பெற்றுள்ளனர். எனவே, வெளிநாட்டவர்களை கண்காணிப்பதற்கு மாவட்ட அளவில் தனி பிரிவை ஏற்படுத்த தமிழக டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா வரும் வெளிநாட்டினரின் பாஸ்போர்ட்  விசா உள்ளிட்ட தகவல்களை பதிவு அலுவலகங்கள் மாநில காவல் துறைக்கு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் விசா காலம் முடிவடைந்து சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த வழக்கில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரியவர்களின் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Related Stories: