அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட செவித் திறன் குறைந்த குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு காது கேட்கும் கருவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட செவித் திறன் குறைந்த குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு காது கேட்கும் கருவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.9.2021) சென்னை, இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருக்க மரத்தை பார்வையிட்டு, அதன் சிறப்புகள் குறித்த கல்வெட்டினை திறந்து வைத்தார்.

மேலும், இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவ மையத்தை திறந்து வைத்து, காது கேளாதோர் வாரத்தையொட்டி மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக 98.80 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்தர செவித் திறன் குறைபாடு கண்டறியும் கருவிகள் மற்றும் உயர்தர அறுவை சிகிச்சை கருவிகளையும், காது கேட்கும் திறன் குறைந்த முதியோர்களுக்கு புதிய காது கேட்கும் கருவிகளையும் வழங்கினார். சென்னை, இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள பெருக்க மரம் (ஙிணீஷீதீணீதீ), உலகின் பழமையான மரவகைகளில் ஒன்றாகும்.

இம்மரம் ஆப்பிரிக்கா கண்டத்தைச் சார்ந்தது. சுமார் 500 ஆண்டுகள் வரை நீண்ட ஆயுட்காலம் கொண்டது. இம்மரத்தின் இலைகள் வைட்டமின் “சி” (க்ஷிவீtணீனீவீஸீ சி) சத்து நிறைந்தது. 37 அடி சுற்றளவு கொண்ட தண்டும், 65 அடி உயரமும் கொண்ட இந்த அரிய மரம் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையும் பாரம்பரியமும் மிக்க சென்னை மருத்துவக் கல்லூரியின் மகத்தான புராதானச் சின்னங்களில் ஒன்றாக மிளிர்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தன்மைகளைக் கொண்ட பெருக்க மரத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று  பார்வையிட்டு, இம்மரத்தைப் பற்றிய தகவல்கள் அடங்கிய கல்வெட்டினை திறந்து வைத்தார்.

சென்னை, இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 15,000 புறநோயாளிகள், 3,800 உள்நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என சுமார் 25,000 நபர்கள் வந்து செல்கின்றனர்.  அவர்களில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளவும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உயர் இரத்த அழுத்த சாத்தியக் கூறு மதிப்பீடு செய்யவும், இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவ மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். உலக காது கேளாதோர் வாரம் இவ்வாண்டு செப்டம்பர் 20-ஆம் தேதி  முதல்  26-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

இவ்வாரத்தின் கடைசி நாளான செப்டம்பர் 26-ஆம் தேதி உலக காது கேளாதோர் நாளாக அமைந்துள்ளது. சென்னை, இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உலக காது கேளாதோர் வாரத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிருஷ்ணகிரி மற்றும் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சென்னை, இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றிற்கு 98.80 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்தர செவித் திறன் குறைபாடு கண்டறியும் கருவிகள் மற்றும் உயர்தர அறுவை சிகிச்சை கருவிகளையும் காது, மூக்கு, தொண்டை துறை தலைவர்களிடம் வழங்கினார்.

மேலும், காது கேட்கும் திறன் குறைந்த முதியோர்களுக்கு புதிய காது கேட்கும் கருவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கியதோடு, காது நுண் எலும்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட குழந்தைகளுக்கு முதன் முறையாக காது கேட்கும் திறனை வெளிப்படுத்தும் கருவியை ஷிஷ்வீtநீலீ ளிழி செய்து, அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஒராண்டு முறையான பயிற்சிக்குப் பின் பேசும் திறன் பெற்ற குழந்தைகளையும் வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு,

நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், திரு. கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தேசிய நலவாழ்வுக் குழுமம் குழும இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் திட்ட இயக்குநர் டாக்டர் எஸ். உமா, இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜாக்கப், இ.ஆ.ப., மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர். நாராயணபாபு, சென்னை இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர். ஈ. தேரணிராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: