நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு

மாமல்லபுரம்:   மாமல்லபுரம் அடுத்த இசிஆர் சாலையொட்டி நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. சமீபத்தில், 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அறிவித்தது. இதைதொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்கள் தினமும் வந்து, பாடம் படிக்கின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா, நேற்று முன்தினம் மாலை நெம்மேலி அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கொரோனா விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறதா, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு முகக்கவசம் அணிந்து வருகிறார்களா, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வகுப்பறையில் அமருகின்றனரா என பார்வையிட்டார்.

அதேபோல், ஆசிரியர்களை தனித்தனியாக அழைத்து, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாடம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, நீண்ட நாட்களாக பள்ளி மூடப்பட்டதால், மாணவர்களுக்கு தற்போது ஒவ்வொரு பாடப்பிரிவு வாரியாக நடத்தப்பட வேண்டிய பாடத்திட்டங்களின் குறிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, பள்ளி தலைமை ஆசிரியர் ஏஞ்சலின் மெர்ஸி, பள்ளியில் தினமும் மாணவர்கள் வருகை எண்ணிக்கை மற்றும் பள்ளியில் அரசு வழிகாட்டுதலின்படி பின்பற்றப்படும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். முன்னதாக, பள்ளி ஆய்வுக்காக வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரைஇ பள்ளி தலைமை ஆசிரியர் ஏஞ்சலின்மெர்ஸி மற்றும் ஆசிரியர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Related Stories: