சூடுபிடித்தது உள்ளாட்சி தேர்தல் ஊராட்சி தலைவருக்கு மாமியார், மருமகள் போட்டி: மற்றொரு இடத்தில் கணவன் - மனைவி மோதல்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இதையொட்டி, ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில் ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த சாவித்திரி மணிகண்டன் (42) போட்டியிடுகிறார். இவர், நேற்று முன்தினம் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து, அவரது மாமியார் ஜெயலட்சுமி லோகநாதன் (56), வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒரே நேரத்தில் மாமியாரும், மருமகளும் வேட்புமனு தாக்கல் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இதே பதவிக்கு.  ஜார்ஜ் கீதா என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல், வாலாஜாபாத் ஒன்றியம் நத்தாநல்லூர் ஊராட்சி பொது இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஊராட்சி மன்ற தலைவருக்கு விவசாய குடும்பத்தை சேர்ந்த மணி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவரை எதிர்த்து, அவரது மனைவி ராணி எதிர்த்து போட்டியிடுகிறார். ஒரே நேரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் கணவன் -  மனைவி நேருக்கு நேர் போட்டியிடுவது வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: