உ.பி-யில் பாஜக ஆட்சியை வீழ்த்த காந்தி ஜெயந்தியன்று ‘பிரதிக்யா யாத்திரை’- பிரியங்காவின் சூறாவளி திட்டங்கள் சுறுசுறுப்பு

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜகவை வீழ்த்த வரும் அக். 2ம் தேதி முதல் மாபெரும் பேரணி, போராட்டம், யாத்திரை திட்டங்களை பிரியங்கா காந்தி தொடங்கி வைக்கிறார். உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக அரசை வீழ்த்த காங்கிரஸ் கட்சி வியூகங்களை வகுத்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கிய காங்கிரஸ் கட்சிக்கு, பல்வேறு தரப்பிலும் ஆதரவு வலுத்துள்ள நிலையில், உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்கிறார்.

மேற்கு உத்தர பிரதேசத்தின் மீரட் மற்றும் ஆக்ரா, கிழக்கு உத்தரபிரதேசத்தின் வாரணாசி, அசாம்கர், பிரயாக்ராஜ், தியோரியா ஆகிய ஆறு இடங்களில் பேரணி நடத்துகிறார். ெதாடர்ந்து கோரக்பூரில் இருந்து முதல்வர் அலுவலகம் நோக்கி நடைபெறும் பேரணியில் பங்கேற்கிறார். பேரணி நடக்கும் தேதி மற்றும் இடங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் கட்சி நிர்வாகிகள் அதற்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றனர். அடுத்த வாரம் பிரியங்கா காந்தி லக்னோ வருவதால், பேரணி நடத்துதல், பிரதிக்யா யாத்திரை திட்டம் குறித்து இறுதி திட்டங்கள் வகுக்கப்படும் என்று, உத்தர பிரதேச காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மேலும், அவர் கூறுகையில், ‘உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ‘ஹம் வச்சன் நிபாயேங்கே’ என்ற கோஷத்துடன் ‘காங்கிரஸ் பிரதிக்யா யாத்திரை’ மேற்கொள்ளப்படும். இந்த யாத்திரையானது 12,000 கிலோமீட்டர் தூரத்திற்கு நடத்தப்படும். அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்கள் வழியாக செல்லும். யாத்திரையின் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை; ஆனால் அக்டோபர் 2ம் தேதி (காந்தி ஜெயந்தி) யாத்திரை தொடங்க வாய்ப்புள்ளது’ என்றார்.

Related Stories: