களக்காடு அருகே இரவில் ஊருக்குள் புகுந்த சிறுத்தைகள் விவசாயிகளை தாக்க முயற்சி: பொதுமக்கள் பீதி

களக்காடு: நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள கீழவடகரை பூலாங்குளம் விளைநிலங்களில் விவசாயிகள் நெல், வாழைகள் பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்களை இரவு நேரங்களில் காட்டுப்பன்றி, கடமான், கரடி போன்ற வனவிலங்குகள் நாசம் செய்து வருகின்றன. இதனை தடுக்க இரவு நேரங்களில் விவசாயிகள் விளைநிலங்களில் காவல் பணி மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கீழவடகரையைச் சேர்ந்த விவசாயிகள் ஜெயராஜ், பாலன் ஆகியோர் பூலாங்குளம் கரையில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளிவந்த 2 சிறுத்தைகள் ஜெயராஜ் மீது பாய்ந்து, அவரை தாக்க முயன்றது. இதைப்பார்த்த இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சுதாரித்துக் கொண்டு சத்தம் போட்டனர். இதனால் சிறுத்தைகள் அங்கிருந்து விளைநிலங்கள் வழியாக குடியிருப்பு பகுதியை நோக்கி ஓடின.

இதுகுறித்து களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே கிராம மக்களும் அப்பகுதியில் திரண்டனர்.

கிராம மக்களும், வனத்துறையினரும் சிறுத்தைகள் புகுந்த விளைநிலங்களில் பதிந்திருந்த கால்தடங்களை ஆய்வு செய்தனர். அவை சிறுத்தையின் தடங்கள்தான் என்று வனத்துறையினர் உறுதி செய்தனர். அதன்பின் அங்குள்ள புதர்கள் மற்றும் விளைநிலங்களில் தேடியும் சிறுத்தைகள் சிக்கவில்லை. சிறுத்தைகள் புகுந்ததால் பீதி அடைந்த கீழவடகரை பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனர். அவர்கள் தெருக்களில் கூட்டமாக குவிந்தனர். குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தைகள் புகாமல் இருக்க ஆங்காங்கே தீ வைத்து தடுப்புகள் ஏற்படுத்தினர். விடிய விடிய பதற்றம் நிலவியதால் வனத்துறையினரும், கிராம இளைஞர்களும் இரவு முழுவதும் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஊருக்குள் புகுந்த சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: