ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் 4 பேர் சரண்

சென்னை: மயிலாப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கடலூர் நீதிமன்றத்தில் 4 பேர் சரணடைந்தனர். மந்தவெளியை சேர்ந்தவர் கோபி என்ற உருளை கோபி (39). கடந்த சில மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவக்குமாரின் கூட்டாளியான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். ஆவின் பால் விற்பனை கடையும் நடத்தி வந்தார். கடந்த 14ம் தேதி இரவு மயிலாப்பூர் அப்பு தெருவில் இவர் தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது, பைக்கில் வந்த 4 பேர், கோபியை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், கோபி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய 4 பேரை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக மயிலாப்பூரை சேர்ந்த சரவணன்  (40), கலைஅரசன் (27), மணலியை சேர்ந்த சுரேஷ் (40), ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (25) ஆகியோர் கடலூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: