துபாயில் இருந்து சென்னைக்கு 1.34 கிலோ தங்க பேஸ்ட் கடத்தி வந்த பெண் கைது

மீனம்பாக்கம்: துபாயில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் உள்ளாடைகளில் மறைத்து எடுத்து வந்த ரூ.65 லட்சம் மதிப்புடைய 1.34 கிலோ மதிப்புடைய தங்க பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒரு இளம்பெண், தனது உள்ளாடைக்குள் தங்க பேஸ்ட் மறைத்து வைத்து எடுத்து வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமான நிலைய சுங்க துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அதிகாரிகள், விமானத்தில் வந்த பெண் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது கேரளா மாநிலத்தை சேர்ந்த 28 வயது பெண் பயணி, தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறி, கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார். சந்தேக்தின் பேரில் பெண் சுங்கத்துறையினர் அவரை நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று, முழுமையாக சோதனையிட்டனர். உள்ளாடைக்குள் 2 தங்க பேஸ்ட் உருண்டைகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளின் எடை 1.34 கிலோ. சர்வதேச மதிப்பு ரூ.65 லட்சம். இதையடுத்து இளம்பெண்ணை கைது செய்து தங்க பேஸ்ட் உருண்டைகளையும் கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: