17ம் தேதி நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் 19ம் தேதிக்கு மாற்றம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவ தகவல் மற்றும் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் டாக்டர் எழிலன், எம்.கே.மோகன், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, மாவட்ட செயலாளர் சிற்றரசு,  தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் குருநாதன் மற்றும் உயர்அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களிடம் உரையாடுவதற்கு இந்த ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலை பெற்று அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் கட்டளை அறை மூலம் ஆலோசனை வழங்கப்படும்.

இதற்காக 333 மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 40 மனநல ஆலோசகர்கள் 24 மணி நேரமும் ஆலோசனை வழங்க தயார் நிலையில் உள்ளனர்.

 17ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தெரிவித்து இருந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அது 19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: