சென்னை:தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா குறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோலவே, முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு விலக்கு சட்ட மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சட்ட முடிவானது நீட் தேர்வு முறையால் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிற பாதிப்புகளை சரி செய்வதற்கு மாற்றாக அனைவரும் பயன்பெற தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பற்றியும், அவற்றுக்கான சட்ட வழிமுறைகளை பற்றியும் முழுமையாக ஆராய்ந்து பரிந்துரை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனை தலைவராக கொண்டு, சில கல்வியாளர்களை கொண்டு உயர்மட்ட குழுவை அரசு அமைத்தது.