ஆவடி: தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஒடிசா வாலிபரை ரோந்து போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரைவாக்கம் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இதில் அம்பத்தூர் தொழிற்பேட்டையைச் சேர்ந்த தனியார் கம்பெனி அதிகாரிகள், ஊழியர்கள் பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு ஏடிஎம் மையத்தில் ஒரு மர்ம நபர் புகுந்து இயந்திரத்தை உடைக்க முயற்சி ஈடுபட்டுள்ளார். அப்போது, சத்தம்கேட்டு அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை குற்றப்பிரிவு காவலர் பாபு, ஊர்க்காவல் படை வீரர் சதீஷ்பாபு ஆகியோர் வந்துள்ளனர். அப்போது மையத்தில் இருந்த வாலிபரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும், போலீசார் சோதனையில் ஏடிஎம் இயந்திரத்தின் ஒரு பகுதி இரும்பு கம்பியால் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.